சென்னை: பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்ட அறிக்கை: 2024-25 ம் நிதியாண்டில் கடந்த டிச.5ம் தேதி ஒரே நாளில் இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ. 238.15 கோடி வருவாய் பதிவுத்துறையில் ஈட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த ஜன.31ம் தேதி 23,061 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, இதே நிதியாண்டில் இரண்டாவது முறையாக அரசுக்கு ரூ. 231.51 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு நாள் வருவாய் வசூலில் இண்டாவது முறையாக இதே நிதியாண்டில் அதிக வசூல் செய்து புதிய மைல்கல்லை பதிவுத்துறை எட்டியுள்ளது.
மேலும், பொதுமக்களின் நலன் கருதி அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புவதால் பொது விடுமுறை நாளான இன்று (பிப்.2ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை அன்று ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப்பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப்பதிவிற்கான கட்டணம் சேர்த்து வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. .
மங்களகரமான நாளான பிப்.3ம் தேதி அன்று கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று மங்களகரமான நாளான பிப்.3ம் தேதி அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்குபதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
The post சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன்கள்: விடுமுறை தினமான இன்றும் அலுவலகங்கள் செயல்படும் appeared first on Dinakaran.