கிராம பஞ்சாயத்துகளில் சிறு, குறு கடைகளுக்கு உரிமம் பெறுவதில் மாற்றங்கள் செய்யப்பட்டு தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிகளை அமல்படுத்தாமல் நிறுத்தி வைத்திருப்பது நல்ல முடிவாகும். பல்வேறு அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு மற்றும் வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் கோரிக்கை ஆகியவற்றை ஏற்று, தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதுடன், இதுகுறித்து மேலும் ஆய்வு நடத்தி பரிந்துரைகளை அளிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
டீக்கடை உள்ளிட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் ஓட்டல்கள் மற்றும் ஆபத்தான பொருட்களை கையாளும் தொழில் நிறுவனங்கள் உரிமம் பெறும் நடைமுறை நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. தொழில் உரிமம் சட்டம் 1958-ல் கொண்டு வரப்பட்டது. இதற்கு முன்பிருந்த ஆட்சிகளிலும் இச்சட்டத்தின்கீழ் உரிமம் வழங்கப்பட்டு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியிருப்பது உண்மைதான். ஆனால், இந்த பட்டியலில் அனைத்து தொழில்களையும் உள்ளடக்கி ஒட்டுமொத்தமாக ‘தொழில் உரிமம்’ என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதே சர்ச்சைக்கு காரணமாக அமைந்துள்ளது.