புதுடெல்லி: ‘‘தென் மாநிலங்களை ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது’’ என திமுக எம்பி திருச்சி சிவா குற்றம்சாட்டினார். மாநிலங்களவையில் நேற்று சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயல்பாடு குறித்து விவாதத்தை திமுக எம்பி திருச்சி சிவா தொடங்கி வைத்து பேசியதாவது: பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கான நிதி ஒதுக்கீடு, 2017-18ம் ஆண்டில் 2.5 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு 1.9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு சுகாதாரத்திற்கு அதிக நிதி ஒதுக்கியிருக்க வேண்டும். தென் மாநிலங்கள் பொது சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி உள்ளன. ஆனால் நன்கு செயல்படாத மாநிலங்களில் ஒன்றிய அரசு கவனம் செலுத்துவதற்கு பதிலாக எங்களை தண்டிக்கின்றனர்.
சுகாதாரத்துறையில் எப்போதும் முதலில் நிற்கும் நாங்கள் பாதிக்கப்படுகிறோம், தண்டிக்கப்படுகிறோம், புறக்கணிக்கப்படுகிறோம். சிறந்த மாணவன் தண்டிக்கப்பட்டதாக எங்கேயும் கேள்விப்பட்டதில்லை, அது நம் நாட்டில் மட்டும்தான் நடக்கும். மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். ஆனால் மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகளை மறுசீரமைப்பு செய்வதாக கூறி எங்களை ஒன்றிய அரசு வஞ்சிக்கப் பார்க்கிறது. அதே சமயம் சரியாக செயல்படாத வடமாநிலங்களுக்கு பரிசளிப்பது போல அதிக மக்கள்தொகை கொண்ட அவர்களுக்கு அதிக தொகுதிகளை தரப்பார்க்கிறார்கள். தென் மாநிலங்களை ஒன்றிய அரசு மாற்றந்தாய் மனப்பான்மையுடனே நடத்துகிறது. நீட் தேர்வை கொண்டு வந்து எங்கள் மாணவர்களை தண்டிக்கிறீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.
The post தென் மாநிலங்களை ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது: மாநிலங்களவையில் திருச்சி சிவா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.