புதுடெல்லி: ‘மகளிர் தினத்தையொட்டி எனது சமூக ஊடக கணக்குகளை சாதனைப் பெண்களிடம் ஒப்படைக்கிறேன்’ என பிரதமர் மோடி கூறி உள்ளார்.ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிறுகிழமைகளில் நடக்கும் ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது:அனைத்து துறையிலும் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். பெண்களின் சக்தி நமது நாட்டை வலுப்படுத்தும். பெண்களின் விடாப்பிடியான மனப்பான்மையை கொண்டாடுவோம், மதிப்போம்.
வரும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் எனது சமூக ஊடக கணக்குகளை பெண்களிடம் ஒப்படைக்க விரும்புகிறேன். வெவ்வேறு துறைகளில் சாதனை படைத்த 7 பெண்கள் தங்களின் பணி மற்றும் அனுபவத்தை எனது சமூக ஊடக கணக்குகள் மூலம் பகிர்ந்து கொள்வார்கள். இது அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் இருக்கும்.
உலகில் 8 பேரில் ஒருவர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த சில ஆண்டுகளின் அவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி விட்டதாகவும் ஆய்வு முடிவுகள் எச்சரிக்கின்றன.
குழந்தைகள் இடையே உடல் பருமன் பிரச்னை 4 மடங்கு அதிகரித்துள்ளது மிகவும் கவலை அளிக்கிறது. எனவே சமையலில் எண்ணெய் பயன்பாட்டை 10 சதவீதம் குறைத்திடுங்கள். இதை முதலில் 10 பேர் சவாலாக ஏற்று செய்யுங்கள். அந்த 10 பேரும் மேலும் 10 பேருக்கு இந்த சவாலை பரப்புங்கள். இதன் மூலம் ஆரோக்கியமான, உறுதியான இந்தியாவை உருவாக்க முடியும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
The post மகளிர் தினத்தை முன்னிட்டு சமூக ஊடக கணக்குகளை பெண்களிடம் ஒப்படைக்கிறேன்: பிரதமர் மோடி தகவல் appeared first on Dinakaran.