இம்பால் : மார்ச் 22ம் தேதி தொடர் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு நேரில் ஆய்வு செய்ய உள்ளது. கடந்த 2023ம் ஆண்டு மே 3ம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் மெய்தி சமூகங்களுக்கு இடையே வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் இதுவரை 250க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். சுமார் 50 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
தற்போது மணிப்பூர் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேசிய சட்ட சேவைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் 20ம் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யா காந்த், விக்ரம் நாத், எம்.எம்.சுந்திரேஷ், கே.வி. விஸ்வநாதன், என்.கோடீஸ்வரர் சிங் ஆகியோர் மார்ச் 22ம் தேதி இம்பால் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அன்றைய தினம் நிவாரண முகாம்களை நீதிபதிகள் பார்வையிட உள்ளதாகவும் சட்டம்-ஒழுங்கு, மனிதாபிமான உதவிகள் மற்றும் மறுவாழ்வு குறித்து அதிகாரிகளுடன் நீதிபதிகள் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த பயணத்தின்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட உதவிகளை வழங்குவதற்கான முகாம்கள் மற்றும் மருத்துவ முகாம்களை நீதிபதிகள் தொடங்கி வைக்க உள்ளனர். இந்த முன்னெடுப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது.
The post மார்ச் 22ம் தேதி தொடர் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு நேரில் ஆய்வு!! appeared first on Dinakaran.