அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த 208 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, 170 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787-8(ஏஐ171) ட்ரீம்லைனர் என்ற விமானம் கடந்த 12ம் தேதி லண்டன் புறப்பட்டது. விமானம் பறக்க தொடங்கிய 30 விநாடிகளிலேயே அங்கிருந்த மருத்துவ கல்லூரி விடுதி மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் சென்ற முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்ட பயணிகள், விமானிகள், விமான பணியாளர்கள் உள்பட 250 பேர் பலியாகி விட்டனர்.
விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்ற பயணி மட்டும் உயிர் பிழைத்தார். முழு அளவில் பெட்ரோல் நிரப்பி சென்ற விமானம் விழுந்தவுடன் தீப்பிடித்து எரிந்ததால், விபத்தில் பலியானவர்களின் உடல்கள் கருகி போய் அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளது. இதையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண அவர்களின் உறவினர்களுடைய டிஎன்ஏ பரிசோதிக்கப்பட்டு, அடையாளம் காணப்பட்டு வருகிறது. இதுகுறித்து அகமதாபாத் சிவில் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராகேஷ் ஜோஷி செய்தியாளர்களிடம் கூறுகையில், “புதன்கிழமை(நேற்று) காலை வரை 208 டிஎன்ஏ மாதிரிகள் பொருந்தி உள்ளன. இதில் 170 உடல்கள் ஏற்கனவே உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன” என தெரிவித்தார்.
* சகோதரரின் உடலுக்கு விஸ்வாஸ் கண்ணீர் அஞ்சலி
விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த விஸ்வாஸ் குமார் ரமேஷின் அண்ணன் அஜய் குமார் ரமேஷ் விமான விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் நேற்று இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு, அஜய் குமார் ரமேஷின் உடல் தகனம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜான விஸ்வாஸ் குமார் ரமேஷ் நேற்று தன் சகோதரரின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு, கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
The post அகமதாபாத் விமான விபத்தில் பலியான 208 பேரின் உடல்கள் அடையாளம் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.