புதுடெல்லி: அமெரிக்காவில் இருந்து பனாமாவுக்கு நாடு கடத்தப்பட்ட 12 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு வந்த விமானம் இன்று மாலை டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையம் வந்தடைந்தது. அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற சட்டவிரோத குடியேறிகள் 299 பேர் பனாமாவுக்கு நாடு கடத்தப்பட்ட பின்பு அங்கிருந்து சொந்த நாடு வரும் இந்தியர்களின் முதல் தொகுதி இதுவாகும்.
தங்கள் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்ப பனாமா, கோஸ்டா ரிகா போன்ற நாடுகளை பாலமாக அமெரிக்கா பயன்படுத்த தொடங்கி இருக்கிறது. இதன் ஒருபகுதியாக பல்வேறு ஆசிய நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளை அமெரிக்கா பனாமாவுக்கு மாற்றியிருந்தது. இதனிடையே, பனாமாவில் இருந்து திரும்பிய இந்தியர்கள் துருக்கி ஏர்லைன்ஸ் மூலம் இஸ்தான்புல் வழியாக டெல்லி வந்திறங்கினர்.