லக்னோ: அயோத்தி ராமர் கோவிலின் கட்டுமானம் இந்த ஆண்டு நிறைவடையும் என கட்டுமான கமிட்டியின் தலைவர் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி 22-ந்தேதி நடைபெற்றது. பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். மேலும் சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அயோத்தி ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் அயோத்தி ராமர் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அயோத்தி ராமர் கோவில் பாரம்பரிய கட்டுமான முறைப்படி 380 அடி நீளம்(கிழக்கு-மேற்கு), 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. கோவிலில் மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, கோவிலின் சில பகுதிகளில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ராமர் கோவிலின் கட்டுமானப் பணிகள் அனைத்தும் இந்த ஆண்டு நிறைவடையும் என அயோத்தி ராமர் கோவில் கட்டுமான கமிட்டியின் தலைவர் நிரிபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
“2025-ல் அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் முழுமையாக நிறைவடையும். துளசிதாசரின் சிலை பக்தர்கள் தரிசனத்திற்காக ஏப்ரல் மாதம் திறக்கப்படும். ராமாயண காலத்தை சேர்ந்த செடிகள் குறித்து ஆய்வு செய்து, அந்த செடிகளை கோவில் வளாகத்திற்குள் நடுவதற்கான பணிகளை செய்ய ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகத்திற்குள் இன்னும் 20 ஆயிரம் கன அடி கற்களை பதிக்க வேண்டியுள்ளது. “
The post அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் இந்த ஆண்டு நிறைவடையும்: கட்டுமான கமிட்டி தலைவர் தகவல் appeared first on Dinakaran.