டெல்லி : இந்திய ராணுவம் 2வது நாளாக பாகிஸ்தானிற்குள் தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று காலை பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று இந்திய பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. இந்திய பாதுகாப்புத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், “இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறியதற்கு பதிலடியாகவே லாகூரில் இந்தியா தாக்குதல் நடத்தி உள்ளது. ஹார்பி ட்ரோன்களைக் கொண்டு லாகூரில் உள்ள வான் தாக்குதல் தடுப்பு அமைப்பு தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவில் காஷ்மீரின் அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்தசரஸ் உள்ளிட்ட இடங்களில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. குறிப்பாக காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா, உரி, பூஞ்ச், மென்தார், ரஜவுரியை ஒட்டிய எல்லை பகுதியில் பாகிஸ்தான் பீரங்கி தாக்குதல் நடத்த முயற்சித்தது.
பஞ்சாப்பின் பதான்கோட், அமிர்தசரஸ், கபர்தலா, ஜலந்தர், லூதியானா, அதம்பூர், பதின்டா. சண்டிகரையும் குறி வைத்து தாக்க முயற்சி நடந்துள்ளது. ராஜஸ்தானின் நல், பலோடு, உட்டரலை, புஜ் பகுதிகளிலும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் முயற்சி மேற்கொண்டது. இவ்வாறு இந்தியாவின் 15 நகரங்களில் பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதல் முயற்சியை வான் தாக்குதல் தடுப்பு அமைப்பு மூலம் இந்தியா முறியடித்தது. இந்திய பகுதிகளை நோக்கி வந்த பாகிஸ்தானின் ஏவுகணைகளை டிரோன்கள் மூலமும் இடைமறித்து ராணுவம் அழித்தது. குறிப்பாக பாகிஸ்தான் தாக்குதலை எஸ் 400 வான் தாக்குதல் தடுப்பு அமைப்பு தடுத்து நிறுத்தி அழித்துள்ளது.ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களின் உடைந்த பாகங்களை பல பகுதிகளில் இருந்து மீட்டதுதான் அதற்கான ஆதாரம் ஆகும். பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த ஒரு ராணுவ வீரர், 3 பெண்கள், 5 குழந்தைகள் உட்பட 16 பேர் பலி ஆகினர். பாகிஸ்தானின் பாணியிலேயே இந்தியா வலுவான பதிலடி கொடுத்து வருகிறது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
The post இந்தியாவின் 15 நகரங்களில் குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி : லாகூரில் ராடார்களை அழித்து இந்தியா பதிலடி!! appeared first on Dinakaran.