திருமலை: இந்தியாவில் முதன்முதலாக ஆந்திராவில் தனியார் தங்கச்சுரங்கம் அமைகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 750 கிலோ தங்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜொன்னகிரி பகுதியில் தங்கம் இருப்பதை இந்திய புவியியல் ஆய்வு மையம் கடந்த 1994ம் ஆண்டு கண்டறிந்தது. ஆய்வு பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனங்களை அழைத்தது. ஆனால் ஆய்வு செய்ய பல கோடி முதலீடு செய்ய வேண்டும் என்பதால் எந்த தனியார் நிறுவனமும் முன்வரவில்லை. இதையடுத்து 2005ம் ஆண்டு சுரங்க கொள்கை மாற்றி அமைக்கப்பட்ட பின், மீண்டும் தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது புவியியலாளர் டாக்டர் மாதிரி ஹனுமா பிரசாத் தலைமையிலான பெங்களூரை சேர்ந்த ஜியோ மைசூர் சர்வீசஸ் லிமிடெட், ஜொன்னகிரி மண்டலத்தில் ஆய்வு செய்ய உரிமம் பெற்றது.
இந்த ஆய்வு பணிக்காக துக்கலி மற்றும் மட்டிகேரா மண்டலங்களில் சுமார் 750 ஏக்கர் நிலத்தையும் வாங்கியது. பின்னர் சுமார் 1,500 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்தது. அனைத்தும் முடிந்து 2021ம் ஆண்டில் சோதனையை தொடங்கியது. இதுகுறித்து ஜியோ மைசூரின் நிர்வாக இயக்குனர் பிரசாத் கூறுகையில், ‘சுமார் 30 ஆயிரம் ஆழ்துளை கிணறுகள் மூலம் சோதனை நடத்தி வருகிறோம். 2 ஆண்டு ஆய்வில் இங்கு வர்த்தக ரீதியாக தங்கத்தை வெட்டி எடுப்பது சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்துள்ளோம். கடந்த டிசம்பர் மாதமே பணிகளை தொடங்க விரும்பினோம்.
ஆனால், சில ஆய்வு முடிவுகள் வர தாமதமானது’ என்றார். நமது நாட்டின் தங்கத்தின் தேவை பெரும்பாலும் இறக்குமதி மூலமாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. கர்நாடகா உள்ளிட்ட சில இடங்களில் இதற்கு முன் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டாலும் பெரும்பகுதி தங்கம் இறக்குமதியே செய்யப்படுகிறது. இதுவரை நமது நாட்டில் உள்ள தங்க சுரங்கங்கள் அனைத்துமே அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. அரசு நிறுவனங்கள்தான் தங்கத்தை வெட்டி எடுத்து வருகிறது.
இதற்கிடையே இந்தியாவின் முதல் தனியார் தங்க சுரங்கம் இப்போது ஜொன்னகிரியில்தான் அமைகிறது. இதுகுறித்து ஆந்திர அரசு நாளை பொதுமக்களிடையே கருத்துகளை கேட்க உள்ளது. சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு, இதே இடத்தில் ஜியோ மைசூர் மற்றும் டெக்கான் கோல்ட்மைன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தங்கத்தை வெட்டி எடுப்பது குறித்து சோதனை செய்தனர். அதன் முடிவுகள் வெற்றிகரமாக இருந்த நிலையில், முழு வீச்சில் இதற்கான பணிகளை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளனர். கருத்து கேட்பிற்கு பிறகு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும். கிடைத்தவுடன் 3 மாதங்களுக்குள் தங்கம் வெட்டி எடுக்கும் பணியை தொடங்க திட்டமிட்டுள்ளனர். இப்பகுதியில் இருந்து ஆண்டுக்கு குறைந்தது 750 கிலோ தங்கத்தை வெட்டி எடுக்க முடியும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
The post இந்தியாவில் முதன்முதலாக ஆந்திராவில் தனியார் தங்கச்சுரங்கம்: ஆண்டுக்கு 750 கிலோ தங்கம் கிடைக்கும் appeared first on Dinakaran.