புதுடெல்லி: ஈழ தமிழரான பாஸ்கரனை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் திருச்சியில் உள்ள ஈழ தமிழர் முகாமில் உள்ள பாஸ்கரனை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப கடந்த 2019ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அந்த உத்தரவை எதிர்த்து பாஸ்கரன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன் மற்றும் என்.கே.சிங் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் பாஸ்கரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வைரவன், ‘‘பாஸ்கரனை மீண்டும் இலங்கைக்கு அனுப்பினால் அவர் கொல்லப்படலாம் என்ற அச்சம் உள்ளது. எனவே அவரை திருப்பி அனுப்பும் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “பாஸ்கரன் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு செல்வதற்கு விசாக்கோரி விண்ணப்பம் செய்துள்ளார். மேலும் அது சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பரிசீலனையில் உள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டு பாஸ்கரனை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
The post ஈழ தமிழரை இலங்கைக்கு அனுப்பும் விவகாரம் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை: ஒன்றிய அரசு பதிலளிக்க நோட்டீஸ் appeared first on Dinakaran.