திருமலை: கணவரின் கள்ளக்காதலியை தூணில் கட்டி வைத்து தாக்கிய மனைவி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் மொகல்லு புறநகர் பகுதியான குட்டுலவாரிபாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பாராவ் (40), விவசாயி. இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அத்திலி பகுதியைச் சேர்ந்த திருமணமான விஜயலட்சுமி (35)யுடன், சுப்பாராவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். சில நாட்களுக்கு பிறகு சுப்பாராவின் மனைவிக்கு கள்ளத்தொடர்பு விவரம் தெரிய வந்தது. இதனால் கடும் ஆத்திரமடைந்த அவர், கணவரிடம் தட்டிக்கேட்டார். இதுதொடர்பாக தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் சுப்பாராவ், தனது கள்ளக்காதலி விஜயலட்சுமியுடன் அத்திலியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இதையறிந்த சுப்பாராவின் மனைவி இருவரையும் கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டார். அதன்படி நேற்று அத்திலி கிராமத்திற்கு தனது உறவினர்கள் 4 பேருடன் சென்றார். அங்கு வீட்டுக்குள் சுப்பாராவும், விஜயலட்சுமியும் இருப்பதை பார்த்த சுப்பாராவின் மனைவி ஆத்திரமடைந்து அவர்களை தாக்கினார். அப்போது சுப்பாராவ் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து விஜயலட்சுமியை குட்டுலவாரிபாலத்திற்கு அழைத்து வந்தனர். அங்குள்ள ஒரு தூணில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து, உதைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த பாலக்கோடெரு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பாதிக்கப்பட்ட விஜயலட்சுமியை மீட்டு பீமாவரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பாராவின் மனைவி உள்பட 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
The post கணவரின் கள்ளக்காதலியை கட்டி வைத்து சரமாரி தாக்கிய மனைவி appeared first on Dinakaran.