சென்னை: தமிழ்நாடு கணினி அவசரநிலை குழு மூலம், சந்தேகத்துக்குரிய 80 ஆயிரம் ஐபி முகவரிகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப சொத்துகள், சேவைகளை பாதுகாக்கும் நோக்குடன் முதல் இணைய பாதுகாப்புக் கொள்கை கடந்த 2020-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து, கிளவுட் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதிய நடைமுறைகளை சேர்க்கவும், புதிய டிஜிட்டல் அச்சுற்றுதல்களை எதிர்கொள்ளவும் இணைய பாதுகாப்புக் கொள்கை 2.0 கடந்த 2024-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதை திறம்பட செயல்படுத்தும் விதமாக, தகவல் தொழில்நுட்பவியல், டிஜிட்டல்சேவைகள் துறை மூலம் தமிழ்நாடு கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (கணினி அவசரநிலை பதில் அளிப்பு குழு) உருவாக்கப்பட்டது.