மும்பை: பிரபல தொலைக்காட்சி நடிகை திபிகா கக்கர், கடந்த சில வாரங்களாக வயிற்றின் மேல் பகுதியில் வலியால் அவதிப்பட்டு வந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதித்து பார்த்த போது, அவரது கல்லீரலில் டென்னிஸ் பந்து அளவிலான கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் மேற்கொண்ட பரிசோதனைகளில், அந்தக் கட்டி புற்றுநோய் என்று உறுதி செய்யப்பட்டது. இந்த செய்தி அவரது குடும்பத்திற்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து திபிகா கக்கர் வெளியிட்ட பதிவில், ‘மிகவும் கடினமான நேரத்தில் இருக்கிறேன். இந்த கடினமான சூழ்நிலையிலும், நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
கல்லீரலில் ஏற்பட்டிருக்கும் இரண்டாம் நிலை புற்றுநோயை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். முழு நம்பிக்கையுடன் இதை எதிர்கொள்கிறேன். என் குடும்பமும், உங்கள் அன்பும், பிரார்த்தனைகளும் எனக்கு துணையாக இருக்கின்றன’ என்று குறிப்பிட்டார். அதேபோல் அவரது கணவர் ஷோயப் இப்ராஹிம், யூடியூப் வீடியோ மூலம் இந்த நோய் குறித்து முதலில் பகிர்ந்து, அவரது ரசிகர்களிடம் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். மருத்துவர்கள் இந்த புற்றுநோய் கல்லீரலில் உள்ள கட்டியில் மட்டுமே உள்ளதாகவும், அறுவை சிகிச்சை மூலம் இதை அகற்ற முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
The post கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகை: மருத்துவமனையில் உருக்கமான பதிவு appeared first on Dinakaran.