புதுடெல்லி: சோனியா காந்தி கூட்டிய கூட்டத்தை சசி தரூர் புறக்கணித்த நிலையில், அவர் கூட்டத்தில் பங்கேற்காததற்கு அவரது குடும்பப் பிரச்னையா? தலைமையுடன் மோதலா? என்ற விவாதம் எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூருக்கும், காங்கிரஸ் கட்சித் தலைமைக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே பனிப்போர் நிலவி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டிலிருந்து சில சமயங்களில் மாறுபட்டு கருத்துக்களைத் தெரிவிப்பதாலும், வெளிப்படையாகப் பேசுவதாலும் சசி தரூரின் செயல்பாடுகள் அவ்வப்போது சர்ச்சையையும், விவாதங்களையும் ஏற்படுத்துவது வழக்கமாகி வருகிறது.
இந்நிலையில், வரும் 21ம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், காங்கிரஸ் கட்சியின் வியூகங்கள் குறித்து விவாதிப்பதற்காக, காங்கிரஸ் நாடாளுமன்ற வியூகக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம், பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் இந்தியா-சீனா எல்லைப் பிரச்னை போன்ற முக்கிய விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்புவது என முடிவு செய்யப்பட்டது.
ஆனால், இந்தக் குழுவில் உறுப்பினராக உள்ள சசி தரூர் கூட்டத்தில் கலந்துகொள்ளாதது பெரும் பேசுபொருளாகியுள்ளது. குடும்பப் பிரச்னை காரணமாகக் கூட்டத்தில் பங்கேற்க இயலாது என அவர் முன்கூட்டியே கடிதம் மூலம் தெரிவித்ததாகக் கட்சி வட்டாரங்கள் கூறினாலும், கட்சித் தலைமையுடன் அவருக்குள்ள கருத்து வேறுபாடு காரணமாகவே அவர் கூட்டத்தைப் புறக்கணித்ததாக டெல்லி அரசியல் வட்டாரங்களில் யூகங்கள் வலுத்துள்ளன.
The post காங்கிரசில் மீண்டும் சலசலப்பு; சோனியா காந்தி கூட்டத்தை புறக்கணித்த சசி தரூர்: குடும்பப் பிரச்னையா? தலைமையுடன் மோதலா? appeared first on Dinakaran.