திருமலை: வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்ட காதலன் வீட்டின் எதிரே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த பெண் போலீஸ் சிகிச்சை பலனின்றி பலியானார். ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், புரோதட்டூரில் மாநில அரசு போக்குவரத்து பணிமனை உள்ளது. இங்கு ேபாலீஸ்காரர் பிரசாந்தி(24) என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இவரும், புரோதட்டூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றிய சித்தூர் மாவட்டம், குப்பம் அடுத்த மார்வாடா கிராமத்தை சேர்ந்த வாசு(26) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையில் கடந்த 6 மாதத்திற்கு முன் வாசு, வேலையை விட்டு விட்டு சென்றுவிட்டார். அதற்கு பிறகு பிரசாந்தியிடம் பேசவில்லையாம். இதனால் பிரசாந்தி கடந்த 23ம் தேதி வாசுவை தேடி, அவரது கிராமத்திற்கு சென்றார்.
அப்போது வாசுவுக்கு, வேறொரு பெண்ணுடன் திருமணம் ஆனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரசாந்தி, வாசுவிடம், ‘என்னை காதலித்துவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளலாமா?’ எனக்கேட்டு தகராறு செய்தார். பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் வாசுவின் வீட்டிற்கு சென்ற பிரசாந்தி தன் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். தீ உடல் முழுவதும் பரவி அலறி துடித்த அவரை, பொதுமக்கள் மீட்டு திருப்பதி ரூயா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பிரசாந்தி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து வாசுவை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
The post காதலன் வீட்டின் எதிரே தீக்குளித்த பெண் போலீஸ் பலி appeared first on Dinakaran.