சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில், நகை திருடப்பட்டது தொடர்பான வழக்கில், கோயில் காவலாளி அஜித் குமார் காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அஜித் குமாரின் முதற்கட்ட உடற்கூறாய்வு அறிக்கையை ஆராய்ந்த மதுரை உயர் நீதிமன்றம், “இது காவல் துறையால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட குற்றம், அரசு தனது சொந்தக் குடிமகனையே கொன்றிருக்கிறது” எனச் சாடியது.
அஜித் குமாரின் மரணம், நாட்டில் அரங்கேறும் காவல் மரணங்களை (Custodial deaths) வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளதுடன், காவல் மரணங்கள் தொடர்பாக எந்தக் காவலரும் தண்டிக்கப்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது. குறிப்பாக, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் காவல் துறையினரால், பட்டியில் சாதி மக்கள் கூடுதலாக இலக்காக்கப்படுவதையும் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.