டெல்லி: காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்யும் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் யோசனையை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது. அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இந்தியாவும், பாகிஸ்தானும் 4 நாள் போரை முடிவுக்கு கொண்டு வருவதாக நேற்று முன்தினம் அறிவித்தன. போர் நிறுத்த தகவலை அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் ஆளாக தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் வெளியிட்டது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்நிலையில், அதிபர் டிரம்ப் நேற்று தனது ட்ரூத் சமூக ஊடக பதிவில்,போரை நிறுத்தியதை போல, காஷ்மீர் பிரச்னையிலும் தீர்வு காண மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.
ஆனால் காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்யும் அமெரிக்காவின் யோசனையை ஒன்றிய அரசு நிராகரித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காஷ்மீர் விவகாரத்தில் 3ம் நாட்டின் சமரசத்தை இந்தியா ஏற்காது என்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்தியாவிடம் திருப்பி ஒப்படைக்கப்படுவது குறித்து மட்டுமே விவாதிக்க வேண்டி இருப்பதாகவும் இந்தியாவிற்கு எதிரான தீவிரவாதத்தை பாகிஸ்தான் கைவிடும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டு இருக்கும் என்றும் ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பது இந்தியாவின் நீண்டகால கொள்கையாக இருந்து வருகிறது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மூக்கை நுழைக்க முயற்சிப்பது இந்திய மக்கள் விரும்பத்தகாததாக பார்க்கப்படுகிறது.
The post காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்யும் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் யோசனையை நிராகரித்தது ஒன்றிய அரசு!! appeared first on Dinakaran.