புதுடெல்லி: மகா கும்பமேளாவில் வசந்த் பஞ்சமி புனித குளியலுக்கு பிறகு அகாடா துறவிகளில் பலரும் வாராணசி, அயோத்திக்கு செல்கின்றனர். உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா விழா திரிவேணி சங்கம கரைகளில் கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கியது. இதில் மகர சங்கராந்தி, மகா பவுர்ணமி, மவுனி அமாவாசை, வசந்த் பஞ்சமி, மகா சிவராத்திரி என மொத்தம் 6 வகையான ராஜ குளியல் நிகழ்ச்சி இடம்பெறுகிறது. இவற்றில் 5வது புனித குளியல் கடந்த 3ம் தேதி வசந்த் பஞ்சமியில் முடிந்தது. இதையடுத்து மகா கும்பமேளாவில் உள்ள அகாடாக்களில் பறக்கும் தங்கள் ஆன்மிக காவி கொடிகளின் உயரத்தை துறவிகள் குறைத்து விட்டனர். மொத்தமுள்ள 13 அகாடாக்களில் 3 முக்கிய பிரிவுகள் உள்ளன. அதாவது, சைவர்கள் 7, வைராகிகள் மற்றும் உதாசிகள் தலா 3 அகாடாக்கள் உள்ளன. சைவர்களின் 7 அகாடா துறவிகள் வாரணாசி சென்று காசி விஸ்வநாதரை தரிசிக்க உள்ளனர். இவர்கள் காசியில் வரும் 26ம் தேதி மகா சிவராத்திரி அன்று மாபெரும் ஊர்வலம் நடத்துகின்றனர்.
இவர்களில் சில அகாடாவினர், 15ம் தேதி ஹரித்துவாரில் சிவனை தரிசிக்க செல்கின்றனர். பின்னர் ஹோலி பண்டிகையை கொண்டாடிவிட்டு துறவிகள், தங்கள் முகாம்களுக்கு திரும்புவார்கள். அயோத்தி ராமர் கோயிலுக்கு உதாசி மற்றும் சில வைஷ்ணவ அகாடாக்களின் துறவிகள் செல்வார்கள். மகா சிவராத்திரிக்கு பிறகே கும்பமேளா நிறைவடையும். இந்நாளில் வரும் ராஜ குளியலுக்கு அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, அகாடாக்களுக்கு 7ம் தேதி புதிய தலைவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அன்றயை தினமே அகாடாக்கள் நிர்வகிக்கும் கோயில்களுக்கான மஹந்த் எனும் தலைமை பண்டிதர்களும் தேர்வு செய்யப்படுவார்கள். அதற்கு பிறகு ஐதீக முறைப்படி, கடி, பகோடி (மோர் குழம்பு மற்றும் பகோடா) சமைத்து உண்ட பின் பிரயாக்ராஜில் இருந்து சென்று விடுவார்கள்.
The post கும்பமேளாவில் வசந்த் பஞ்சமி புனித குளியலுக்கு பிறகு வாரணாசி, அயோத்தி செல்லும் அகாடா துறவிகள் appeared first on Dinakaran.