உத்தரகாண்ட்: கேதார்நாத்தில் மேகவெடிப்பில் இறந்த 702 பேரின் உடல்கள் 12 ஆண்டு ஆன பிறகும் அடையாளம் காணப்படவில்லை. 2013ம் ஆண்டு ஜூன் 15, 16ம் தேதிகளில் உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன், நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இந்த இயற்கை பேரிடரில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் மற்றும் காணாமல் போயினர். லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கினர். ராணுவமும், காவல்துறையும் இணைந்து மக்களை மீட்டனர்.
அதிகாரப்பூர்வ தகவலின்படி, இந்த வெள்ளத்தில் சுமார் 4,400 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். கேதர்நாத் சுற்றுப்பகுதியில் வசித்த உள்ளூர்வாசிகள் மட்டும் 991 பேர் பலியாகினர். இந்த பேரிடர் பகுதியில் மீட்புப் படையினர் நடத்திய தேடுதல் பணியின்போது 55 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும், 735 சடலங்கள், உடல் பாகங்கள் மற்றும் மனித எலும்புகள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட 735 உடல்களின் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பெங்களூரில் உள்ள சிறப்பு ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.
மேலும், பெருவெள்ளத்தில் காணாமல் போனவர்களில் உறவினர்கள் 6,000க்கும் மேற்பட்டோர் தங்களின் மாதிரிகளை டிஎன்ஏ பரிசோதனைக்காக அளித்தனர். ஆனால், 735 உடல்களின் டிஎன்ஏ மாதிரிகளுடன் உறவினர்கள் அளித்த வெறும் 33 மாதிரிகள் மட்டுமே பொருந்தின. 12 ஆண்டுகள் ஆகியும் உயிரிழந்த 702 பேர் யாரென கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறது.
இதுதொடர்பாக, கேதர்நாத் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில், 702 பேரின் டிஎன்ஏ அறிக்கைகள் எங்களிடம் உள்ளன. ஆனால் உறவினர்களின் மாதிரிகளுடன் பொருந்தவில்லை. அடையாளம் காணமுடியாதது மனவேதனை அளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார். பேரிடர் நடந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், உறவினர்களின் நிலை அறியாமல் ஆயிரக்கணக்கானோர் தவித்து வருகின்றனர்.
The post கேதார்நாத் மேகவெடிப்பு.. 12 ஆண்டுகள் ஆகியும் இறந்த 702 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை!! appeared first on Dinakaran.