கோழிகோடு: கேரள மாநிலம் பாலக்காட்டில் மேலும் ஒருவருக்கு நிஃபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மன்னார்காட்டைச் சேர்ந்த 59 வயது நபர் நிஃபா வைரஸால் இறந்த நிலையில் அவரது மகனுக்கு நிஃபா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து கேரளாவில் மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, திருச்சூர், கண்ணூர் போன்ற பல மாவட்டங்கள் உயர் எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நிஃபா வைரஸ் பாதிப்பு காரணமாக கேரளா – தமிழ்நாடு எல்லைகளில் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளிலும் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள தமிழக-கேரள எல்லை பகுதிகளான பட்டிசாலை, முள்ளி உள்ளிட்ட பகுதிகளில் காரமடை வட்டார மருத்துவ அலுவலர் சுதாகர் தலைமையில், சுகாதார மேற்பார்வையாளர் (பொறுப்பு) சியாமளா மேற்பார்வையில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் பட்டிசாலை, முள்ளி சோதனைச்சாவடிகளில் கேரள மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
வாகனங்களில் வரும் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்தனர். காய்ச்சல் இருந்தால் அவர்களது பெயர், ஊர், தொடர்பு எண், செல்லும் இடம் உள்ளிட்ட விபரங்களை சேகரித்து அருகில் உள்ள மருத்துவமனையில் அவர்களது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
நிபா வைரஸ் மிகவும் கொடிய நோய் என்றும், சரியான நேரத்தில் கட்டுப்படுத்தப்படாவிட்டால் அது ஒரு தொற்றுநோயாக மாறக்கூடும் என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர். கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் நாடு முழுவதிலும் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post கேரளாவின் பாலக்காட்டில் மேலும் ஒருவருக்கு நிஃபா வைரஸ் உறுதி: கேரளா – தமிழ்நாடு எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம் appeared first on Dinakaran.