ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பஸ்தார் பிராந்தியத்தில் நேற்று இருவேறு என்கவுன்ட்டர் சம்பவங்களில் 30 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கை பாதுகாப்பு படைகளுக்கு கிடைத்த மற்றொரு வெற்றி என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். இன்னும் ஓராண்டில் இந்தியா, நக்சலைட்கள் இல்லாத நாடாக மாறும் என்றும் உறுதிபட கூறினார்.
இந்தியாவில் நச்சலைட் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக சத்தீஸ்கர் உள்ளது. இம்மாநிலத்தில் நக்சலைட் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் பாதுகாப்பு படைவீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். நக்சலைட்களுக்கு எதிரான இந்த தேடுதல் நடவடிக்கையின்போது, அவ்வப்போது பாதுகாப்பு படையினருக்கும் நக்சலைட்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.