திருவனந்தபுரம்: சபரிமலையில் வரும் 14ம் தேதி முதல் 18ம்படி ஏறிய உடன் ஐயப்பனை தரிசிக்கும் வகையில் புதிய வசதி ஏற்படுத்தப்படுகிறது. இதற்கான பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது பக்தர்கள் 18ம் படி ஏறிய பின்னர் பக்தர்கள் சில வினாடிகள் மட்டுமே ஐயப்பனை தரிசிக்க முடிந்தது. ஐயப்பனை சற்று கூடுதல் நேரம் தரிசிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பெரும்பாலான பக்தர்கள் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் பக்தர்கள் 18ம் படி ஏறியவுடன் ஐயப்பனை தரிசிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இனி 18ம்படி ஏறிய பின்னர் நடை மேம்பாலத்தில் ஏற தேவையில்லை. கொடி மரத்தை தாண்டி பக்தர்கள் நேராக சென்று ஐயப்பனை தரிசித்து பின்னர் இடது புறமாக செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 18ம்படி ஏறிய உடன் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்தபடியே வரிசையில் செல்லலாம்.
இதற்காக இடது புறமும், வலது புறமும் இரண்டு வரிசைகள் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் பக்தர்கள் குறைந்தது 20 வினாடிகள் தரிசனம் செய்ய முடியும். பக்தர்களை இரண்டு வரிசைகளாக பிரிக்க நடுவில் நீளமாக ஒரு பெரிய உண்டியல் அமைக்கப்பட்டு வருகிறது. வரும் 14ம் தேதி முதல் பக்தர்கள் இந்த வசதியை பயன்படுத்தி தரிசனம் செய்யலாம் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறினார்.
The post சபரிமலையில் 14ம் தேதி முதல் புதிய வசதி பக்தர்கள் 18ம்படி ஏறியவுடன் ஐயப்பனை தரிசிக்கலாம்: இறுதிக் கட்டத்தில் பணிகள் appeared first on Dinakaran.