சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று வருவதற்கான இணைப்பு வசதியை உருவாக்கும் முயற்சியில் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதற்காக தனி துணை நிறுவனம் ஒன்றையும் உருவாக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக வெளிவரும் செய்திகள் சென்னை நகர மக்களின் வயிற்றில் பால் வார்க்கும் செய்தியாகும்.
ஏனென்றால், சென்னையில் தற்போது இயங்கிவரும் 54 கி.மீட்டர் மெட்ரோ ரயில் வசதி சென்னை மக்களின் இதயத் துடிப்பாக மாறி வருகிறது. அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசல்களுக்கு மத்தியில், குளிர்சாதன வசதியுடன் தங்கு தடையின்றி, சொகுசான பயணத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் வழங்கி வருவதன் மூலம், சென்னை மக்களின் இதயத்திற்கு நெருக்கமான அமைப்பாகவே மெட்ரோ ரயில் மாறிவிட்டது. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கையே இதற்கு சான்றாகும்.