திருவனந்தபுரம்: கொச்சியிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த வாரம் கலால் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இதில் ஒரு குடியிருப்பில் இருந்து 1.6 கிராம் உயர்ரக கலப்பின கஞ்சாவுடன் பிரபல மலையாள டைரக்டர்களான காலித் ரகுமான் மற்றும் அஷ்ரப் ஹம்சா ஆகியோர் பிடிபட்டனர். விசாரணைக்குப் பின் கலால் துறையினர் இருவரையும் கைது செய்தனர். கஞ்சாவுடன் பிரபல டைரக்டர்கள் கைது செய்யப்பட்டது மலையாள சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே அந்த அடுக்குமாடி குடியிருப்பு பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான சமீர் தாஹிரின் பெயரில் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி அவருக்கு கலால்துறை நோட்டீஸ் கொடுத்தது. இதன்படி நேற்று சமீர் தாஹிர் கொச்சியிலுள்ள கலால்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது உயர்ரக கஞ்சா அடுக்குமாடி குடியிருப்புக்கு எப்படி கொண்டுவரப்பட்டது என்பது குறித்து அவரிடம் கலால்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின் அவரை கைது செய்த கலால்துறையினர் பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். சமீர் தாஹிர் தமிழில் வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களிலும் ஒளிப்பதிவாளராக
இருந்துள்ளார்.
The post சொச்சியில் உயர்ரக கஞ்சா கைப்பற்றப்பட்ட விவகாரம் பிரபல மலையாள சினிமா டைரக்டர் கைது appeared first on Dinakaran.