மும்பை: மகாராஷ்டிராவில் ஹோலி வண்ணங்களை கழுவ ஆற்றில் இறங்கிய நான்கு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை அருகேயுள்ள தானே மாவட்டத்தின் பத்லாப்பூர் பகுதியில் 15-16 வயதுடைய பத்தாம் வகுப்பு மாணவர்கள் நேற்று ஹோலி பண்டிகையை கொண்டாடினர். பின்னர் பத்லாப்பூர் பகுதியில் உள்ள உல்ஹாஸ் ஆற்றில் ஹோலி வண்ணங்களை கழுவுவதற்காக குளிக்க திட்டமிட்டு இறங்கியுள்ளனர். அப்போது ஒரு சிறுவன் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனைப் பார்த்த மற்ற சிறுவர்கள் அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர்.
இதில் ஆர்யன் மேதர் (15), ஓம் சிங் தோமர் (15), சித்தார்த் சிங் (16), மற்றும் ஆர்யன் சிங் (16) ஆகிய 4 பேரும் பரிதாபமாக நீரில் மூழ்கினர். இதனைப் பார்த்த மற்ற சிறுவர்கள் உடனடியாக உள்ளூர்வாசிகள், காவல்துறை மற்றும் அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் நீரில் மூழ்கியவர்களை மீட்டு நால்வரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பத்லாப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
The post சோகத்தில் முடிந்த ஹோலி கொண்டாட்டம்.. மகாராஷ்டிராவில் 4 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!! appeared first on Dinakaran.