புதுடெல்லி: டெல்லி ஜார்கண்ட் பவனில் அறை ஒதுக்காததால் தரையில் அமர்ந்து சாப்பிட்ட பாஜக எம்எல்ஏ, மாநில முதல்வரின் மனைவியிடம் புகார் அளித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம், பலாமு மாவட்டத்தின் பாங்கி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினரான டாக்டர் சசிபூஷன் மேத்தா, டெல்லியில் உள்ள ஜார்கண்ட் பவனுக்கு சென்றிருந்தார்.
அவர் தனது பெயரில் இரண்டு அறைகளை முன்பதிவு செய்திருந்த நிலையில், அங்கு சென்றடைந்தபோது, வரவேற்பறையில் இருந்த ஊழியர்கள், அறைகள் எதுவும் காலியாக இல்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும், அவர் விசாரித்ததில், ஒரு அறை முன்னாள் எம்.எல்.ஏ ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதும், மற்ற அறைகள் காலியாக இருப்பதும் தெரியவந்தது. தனக்கு அறைகள் மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ மேத்தா, ஜார்கண்ட் பவனின் வரவேற்பறையிலேயே தனது உடைமைகளுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கு அவர் கொண்டு வந்திருந்த தனது மதிய உணவு பார்சலை திறந்து, தரையில் அமர்ந்தபடியே உணவு சாப்பிட்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எனக்கு அறை ஒதுக்கப்படாதது, மாநில சட்டமன்றத்தையே அவமதிக்கும் செயல். இதை பொறுத்துக்கொள்ள முடியாது’ என்று அவர் கூறினார். இதுகுறித்து அவர் சட்டமன்ற சபாநாயகர், ஒன்றிய அமைச்சர் சஞ்சய் சேத் மற்றும் காண்டே தொகுதி எம்எல்ஏவும், முதலமைச்சரின் மனைவியுமான கல்பனா சோரன் ஆகியோரிடம் புகார் அளித்தார். மேலும் அவர் கூறுகையில், ‘கோடிக்கணக்கில் செலவு செய்து கட்டப்பட்ட இந்த ஜார்கண்ட் பவன் யாருக்காக கட்டப்பட்டது? ஒரு எம்.எல்.ஏ.வுக்கே அறை மறுக்கப்பட்டு அவமதிக்கப்படுகிறார். மாநில முதலமைச்சர் ஒரு கண்ணில் வெண்ணெயும், மறுகண்ணில் சுண்ணாம்பும் வைப்பது போல பாகுபாடு காட்டக்கூடாது’ என்றும் குறிப்பிட்டார்.
The post ஜார்கண்ட் பவனில் அறை ஒதுக்காததால் தரையில் அமர்ந்து சாப்பிட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர்: மாநில முதல்வரின் மனைவியிடம் புகார் appeared first on Dinakaran.