சென்னை: திண்டுக்கல், தருமபுரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று (செப். 10) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு ஒடிசா– வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இவற்றின் தாக்கத்தால் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.