திருத்தணி: திருத்தணி ரயில் நிலையத்தில் நேற்று காலை ஆந்திர மாநிலம், கடப்பா சென்ற பயணிகள் ரயிலில் திடீரென பிரேக் பழுதானது. இதனால் அம்மார்க்கத்தில் சுமார் 1 மணி நேரம் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை 7.10 மணியளவில் ஆந்திர மாநிலம், கடப்பாவுக்குச் செல்லும் ரயில் பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. இதில் 7 பெட்டிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
இந்த ரயில் காலை 7.30 மணியளவில் திருத்தணி ரயில்நிலையம் வந்து, நடைமேடை ஒன்றில் நின்றது. பின்னர் அங்கிருந்து கடப்பாவுக்கு ரயில் புறப்பட்டபோது, அதன் பிரேக்கில் பழுது ஏற்பட்டு கரும்புகை எழுந்தது. இதைத் தொடர்ந்து இன்ஜின் டிரைவர் ரயிலை நிறுத்திவிட்டார். ரயிலிலிருந்து அனைத்து பயணிகளும் கீழே இறக்கிவிடப்பட்டனர். இதனால் பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற பயனிகள் அவதிக்குள்ளாகினர்.
இதுகுறித்து, தகவலறிந்த அரக்கோணம் ரயில்வே அதிகாரிகள் மற்றும் பழுதுபார்ப்பு ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அந்த ரயிலின் பிரேக்கில் ஏற்பட்டிருந்த பழுதுகளை நீக்கும் பணிகளில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, சுமார் 1 மணி நேரம் தாமதமாக கடப்பாவுக்கு ரயில் புறப்பட்டுச் சென்றது. இதனால் அம்மார்க்கத்தில் பிற ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது. இதில், ரயிலில் பிரேக் பழுது ஏற்பட்டிருப்பதை இன்ஜின் டிரைவர் கண்டறிந்து உடனடி நடவடிக்கை எடுத்ததால், அந்த ரயிலில் பயணம் செய்த 300க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
The post திருத்தணியிலிருந்து கடப்பா சென்றபோது பிரேக் பழுது காரணமாக ரயில் சேவை பாதிப்பு: ஒரு மணி நேரத்திற்கு பின் மீண்டும் இயக்கம், பயணிகள் அவதி appeared first on Dinakaran.