திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் மாதத்திற்கான தரிசன டிக்கெட், சேவைகள் மற்றும் அறைகள் ஒதுக்கீடு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் அக்டோபர் மாதத்திற்கான சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட சேவா டிக்கெட்டுகளுக்கான குலுக்கல் பதிவு வரும் 19ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
இதில் 21ம் தேதி காலை 10 மணி வரை பக்தர்கள் பதிவு செய்யலாம். குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 21 முதல் 23ம் தேதி மதியம் 12 மணிக்குள் கட்டணத்தை செலுத்தி டிக்கெட் டவுன்லோடு செய்து கொள்ளலாம். வரும் 22ம் தேதி காலை 10 மணிக்கு கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவா மற்றும் வருடாந்திர புஷ்பயாகம் டிக்கெட்டுகள் வெளியிடப்படும். இதே சேவைக்கு நேரடியாக பங்கேற்காமல் அக்டோபர் மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள் அதே நாளில் பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும்.
அங்கப்பிரதட்சனம் டோக்கன்கள் 23ம் தேதி காலை 10 மணிக்கும், வாணி அறக்கட்டளைக்கான டிக்கெட்டுகள் காலை 11 மணிக்கும், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோய் உள்ளவர்களுக்கு பிற்பகல் 3 மணிக்கும் இலவச டோக்கன்கள் வழங்கப்படும். ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஜூலை 24ம்தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். திருமலை மற்றும் திருப்பதியில் உள்ள அறைகளுக்கு 24ம்தேதி பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும். பக்தர்கள் தங்கள் தரிசனம் மற்றும் சேவை டிக்கெட், அறைகள் முன்பதிவுக்கு தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ வலைதளமான https://ttdevasthanams.ap.gov.in மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.4.19 கோடி காணிக்கை; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 73,020 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 27,609 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ரூ.4.19 கோடி காணிக்கையாக கிடைத்துள்ளது. இன்று காலை வைகுண்டம் காம்பளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியதால் பக்தர்கள் வெளியே நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் தரிசனம் செய்ய 24 மணி நேரமாகும். ரூ.300 கட்டண டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.
The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் மாத தரிசன டிக்கெட் ஒதுக்கீடு தேதி அறிவிப்பு! appeared first on Dinakaran.