திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மாசி மாத பவுர்ணமியொட்டி வரும் 13ம்தேதி கிரிவலம் செல்ல உகந்தநேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு அண்ணாமலையார் மலையை கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். அதன்படி மாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 13ம்தேதி காலை 11.35 மணிக்கு தொடங்கி, 14ம்தேதி பிற்பகல் 12.23 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, வரும் 13ம் தேதி இரவு கிரிவலம் செல்ல உகந்த நேரம் என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையொட்டி கிரிவல பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல் அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்யவும், நீண்டநேரம் வரிசையில் பக்தர்கள் காத்திருப்பதை தவிர்க்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கவும், சென்னை பீச்-திருவண்ணாமலை இடையே வழக்கம்போல சிறப்பு ரயில்கள் இயக்கவும், திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் வழியாக சென்னை தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
The post திருவண்ணாமலையில் வரும் 13ம்தேதி பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்தநேரம் அறிவிப்பு appeared first on Dinakaran.