பெரம்பூர்: தெம்பு, திராணி, தைரியம் இருந்தால் அண்ணா அறிவாலயத்தில் ஒரு செங்கல்லையாவது அண்ணாமலை தொட்டு பார்க்கட்டும் என கொளத்தூரில் முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியின்போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஒரு வருடத்திற்கு தினந்தோறும் காலையில் ”அன்னம் தரும் அமுதக்கரங்கள்” என்ற பெயரில் காலை உணவு தரும் திட்டத்தை நேற்று துர்கா ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதைத்தொடர்ந்து சென்னை கிழக்கு மாவட்டம் கொளத்தூர் மேற்கு பகுதி திமுக சார்பில், ஜிகேஎம் காலனி 69வது வட்டம் மற்றும் 64 (அ) வட்டத்தில் அன்னம் தரும் அமுதக்கரங்கள் 2வது நாள் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு, ஏழை, எளிய பொதுமக்களுக்கு உணவு பரிமாறினார்.
இதில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாவட்ட துணை செயலாளர் தேவஜவகர், மாமன்ற உறுப்பினர் சரிதா மகேஷ்குமார், பகுதி செயலாளர் ஏ.நாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதையடுத்து நிருபர்களை சந்தித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது: தமிழக முதலமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று ஜெகநாதன் தெருவில் காலை சிற்றுண்டி ஆயிரம் பேருக்கு வழங்கும் நிகழ்வை அண்ணியார் துவக்கி வைத்தார். 2வது நாளாக ஜிகேஎம் காலனி பகுதியில் அமுதகரங்கள் என்ற தலைப்பில் காலை சிற்றுண்டி வழங்குகிறோம். அறிவித்தபடி 365 நாட்கள் நிகழ்ச்சி நடைபெறும். இத்திட்டத்தால் மக்கள் பெரிதும் மகிழ்ச்சி யடைகிறார்கள். காலை சிற்றுண்டி வழங்கும் இடத்தை ஒரு நாள் முன்கூட்டியே அந்த பகுதியில் தெரிவித்துவிடுவதால், பொதுமக்கள் சிற்றுண்டியை பெற்று மகிழ்ச்சியடைகிறார்கள். தமிழகத்தில் இல்லாமையை நீக்குவோம், வயிற்றுப்பசியை இல்லாமல் செய்வோம் என்ற இந்நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரிய ஆதரவு இருக்கிறது.
கர்நாடகத்தில் போலீசாக இருந்தது போன்று நினைத்துகொண்டிருக்கிறார் அண்ணாமலை, அவர் கர்நாடக போலீஸ் கிடையாது. அண்ணா சாலை பகுதியில்தான் அண்ணா அறிவாலயம் அமைந்திருக்கிறது என்பதைத்தான் துணை முதலமைச்சர் கூறினார். அண்ணா அறிவாலயத்தில் இருக்கிற செங்கற்களை ஒவ்வொன்றாக பிடுங்கும் பணி நிறைவடையும் வரை நான் ஓயமாட்டேன் என சொல்லி இருந்ததற்குதான் உதயநிதி இந்த பதிலை கூறியிருந்தார். இப்போதும் சொல்கிறோம், தெம்பு இருந்தால், திராணி இருந்தால், தைரியம் இருந்தால் அண்ணா சாலையில் அமைந்திருக்கிற அண்ணா அறிவாலயத்தில் ஒரு செங்கலையாவது அவர் தொட்டுப் பார்க்கட்டும்.
இந்த இயக்கம் நீர்பூத்த நெருப்பு, நெருப்பு ஆற்றில் பயணித்த இயக்கம். நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல. 75 ஆண்டுகளை கடந்து திராவிட மாடல் ஆட்சியை ஏற்படுத்தி இருக்கிற இரும்பு மனிதர் முதல்வர் தலைமையில் இருக்கிற இயக்கம். மிசா என்ற கொடுஞ்சிறையில் கொள்கைக்காக சிறையில் இருந்தவர். அவர் வழி வருகிற லட்சோப லட்சம் தொண்டர்கள் இருக்கின்றவரை ஓர் அண்ணாமலை அல்ல, ஓராயிரம் அண்ணாமலை வந்தாலும் எதுவும் செய்ய முடியாது. கீழ்பாக்கத்தில் இருக்க வேண்டியவர்கள் எல்லாம் பிதற்றளோடு கூறி திரிவதை எந்நாளும் திமுக அனுமதிக்காது. இவரின் இதுபோன்ற கூற்றுகளால் இன்னும் இந்த இயக்கம் வீறுபெறும். இந்த இயக்கத்தின் தொண்டர்கள் நான்கு கால் பாய்ச்சலில் இருந்து எட்டு கால் பாய்ச்சலை நோக்கி செல்வார்கள்.
பொன் ராதாகிருஷ்ணன் விமர்சனம் குறித்த கேள்விக்கு, வயது முதிர்ந்த ஒரு அரசியல்வாதி அவர். அவர் மீது நாங்களும் எங்கள் முதல்வரும் மரியாதை வைத்துள்ளோம். வயது முதிர்ந்து ஒருவர் ரெட் லைட் ஏரியா என்று குறிப்பிடுவது அவரது எண்ணங்கள் என்ன பிரதிபலிக்கிறது என்று காட்டுகிறது. கெட்அவுட் ஸ்டாலின் என்ற ஹேஸ்டேக் அவர்கள் போடட்டும், மக்கள் எந்த அளவிற்கு வரவேற்பு கொடுக்கிறார்கள் என பார்க்கட்டும். ஏற்கனவே பாரதிய ஜனதா அனுபவித்தது கோபேக் மோடி என்பதை மீண்டும் அவர்களே அதை கையில் எடுக்கிறார்கள். கெட்அவுட் என்ற வார்த்தைக்கு உகந்த ஒருவர் உண்டென்றால், அது ஒன்றிய பிரதமர் தான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post தெம்பு, திராணி, தைரியம் இருந்தால் அண்ணா அறிவாலயத்தில் ஒரு செங்கல்லையாவது அண்ணாமலை தொட்டு பார்க்கட்டும்: அமைச்சர் சேகர்பாபு சவால் appeared first on Dinakaran.