திருமலை: தெலங்கானாவில் சுரங்க பணியின்போது சிக்கிய தொழிலாளர்களின் சடலங்களை மீட்க ரோபோக்களையும் பயன்படுத்துவோம் என முதல்வர் ரேவந்த்ரெட்டி தெரிவித்தார். தெலங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டம் டோமலபென்டா அருகே சைலம் அணையில் மலையின் பக்கவாட்டு கரையில் சுரங்க கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த 22ம்தேதி இப்பணி நடந்தபோது திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதில் 8 பேர் சிக்கிகொண்டனர். அவர்களை உயிருடன் மீட்கும் பணியில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். ஆனால் மீட்க முடியவில்லை. இதற்கிடையில் 8 பேரும் இறந்துவிட்டதாக கடந்த 28ம் தேதி உறுதிசெய்யப்பட்டது. சடலங்களை மீட்கும் பணி தொடங்கியுள்ளது.
இந்நிலையில் மீட்பு பணி நடைபெறும் இடத்தை முதல்வர் ரேவந்த்ரெட்டி நேற்று பார்வையிட்டார். மீட்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் முதல்வர் ரேவந்த்ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது: விபத்து நடந்த பகுதியை பார்வையிட்டேன். விபத்து நடந்ததில் இருந்து அவர்களை மீட்க அரசும் எங்கள் அதிகாரிகளும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். இது எதிர்பாராத விபத்து. மீட்பு பணியாளர்கள் இரவு பகலாக கடுமையாக உழைத்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு துணையாக இருக்கும். உடல்களை மீட்க ரோபோக்களையும் பயன்படுத்துவோம். சிக்கியுள்ள உடல்களை வெளியே எடுக்க இன்னும் 2 நாட்கள் ஆகலாம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இப்போது நாம் அனுதாபம் காட்ட வேண்டும். இந்த சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
The post தெலங்கானாவில் கால்வாய் சுரங்கத்தில் இறந்தவர்களின் உடல்களை மீட்க ரோபோக்கள் பயன்படுத்தப்படும்: முதல்வர் ரேவந்த் ரெட்டி பேட்டி appeared first on Dinakaran.