டெல்லி: தொகுதி சீரமைப்பு தென் மாநிலங்களுக்கு எதிரானது என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். மார்ச் 22ல் நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு அரசு குழுவினர் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி க்கு அழைப்பு விடுத்தனர். திமுக எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா. என்.ஆர்.இளங்கோ, அருண் நேரு ஆகியோரும் டெல்லியில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்தனர். பின்னர் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை ரேவந்த் ரெட்டியிடம் வழங்கினர்.
இதையடுத்து சென்னையில் வரும் 22ம் தேதி நடைபெறும் தொகுதி மறுவரையறை குறித்த தென் மாநில அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கான அழைப்பை ஏற்ற பின் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; தொகுதி சீரமைப்பு தென் மாநிலங்களுக்கு எதிரானது. தமிழ்நாடு முதல்வர் கூட்டும் கூட்டத்தில் காங்கிரஸ் மேலிடத்தில் அனுமதி பெற்று பங்கேற்பேன். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள முன்னெடுப்புக்கு முழு ஆதரவு. நடக்கப்போவது தொகுதி மறுசீரமைப்பு அல்ல; மாறாக தென்னிந்தியாவின் தொகுதிகளை குறைக்கும் நடவடிக்கை.
இந்தியாவுக்கு அதிகமான வரி வருவாயை தென்னிந்திய மாநிலங்கள் வழங்கி வருகின்றன. தமிழ்நாடு அரசின் முன்னெடுப்புக்கு வாழ்த்துகள். வடமாநிலங்களைவிட தென்னிந்திய மாநிலங்கள் நாட்டுக்கு அதிக அளவில் வரியை வாரி வழங்கி வருகின்றன. காங்கிரஸ் மேலிட அனுமதி பெற்று 22ம் தேதி நடைபெறும் தொகுதி மறுவரையறை குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பேன். தொகுதி மறுசீரமைப்பு ஆபத்தை உணர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான முன்னெடுப்பை செய்துள்ளார் என ரேவந்த் ரெட்டி கூறினார்.
The post தொகுதி சீரமைப்பு தென் மாநிலங்களுக்கு எதிரானது; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முன்னெடுப்புக்கு வாழ்த்துகள்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பாராட்டு! appeared first on Dinakaran.