டெல்லி: தொகுதி மறுசீரமைப்பு மூலம் தென் மாநிலங்களுக்கு எதிராக பழிவாங்கும் அரசியலை பாஜக முன்னெடுக்கிறது என தெலங்கானா முதல்வர் ரேவந்த் தெரிவித்துள்ளார். தற்போதைய மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி; மக்கள் தொகை கட்டுப்பாடு என்பது ஒன்றிய அரசின் திட்டம்.
அதைத்தான் தென் மாநிலங்கள் செயல்படுத்தின. வேண்டுமானால் 30 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்தால், தென் மாநிலங்களின் மக்கள் தொகை வளர்ச்சி என்ன என்பதை பார்க்க முடியும். இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையை பொறுத்தவரையில், விகிதாச்சார அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை அதிகரிக்க வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு மூலம் தென் மாநிலங்களுக்கு எதிராக பழிவாங்கும் அரசியலை பாஜக முன்னெடுக்கிறது.
தென் மாநிலங்களில் பாஜகவுக்கு பிரதிநிதித்துவம் இல்லாததால் பழிவாங்கும் அரசியலை அக்கட்சி முன்னெடுக்கிறது. தென்மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைக்க வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம்; இந்த நடவடிக்கையின் மூலம் வட மாநிலங்களுக்கு அதிக பலன் கிட்டும். இந்த விவகாரத்தில் விரிவான ஆலோசனை அவசியம். எனவே தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க தேசிய அளவில் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கூறினார்.
The post தொகுதி மறுசீரமைப்பு மூலம் தென்மாநிலங்களை பாஜக பழிவாங்குகிறது: ரேவந்த் ரெட்டி appeared first on Dinakaran.