திருமலை: ‘ரூ.500 நோட்டுகளை ஒழித்து ஊழலைக் குறைக்க வேண்டும்’ என தெலுங்கு தேசம் கட்சி மாநாட்டில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார். ஆந்திர மாநிலம், கடப்பாவில் தெலுங்கு தேசம் கட்சியின் மாநாடு நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் மாநாட்டுக்கு அக்கட்சியின் தேசிய தலைவரும், ஆந்திர மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு தலைமை தாங்கி பேசியதாவது:
43 ஆண்டுகால அரசியலில் நாட்டில் வேறு எந்தக் கட்சியும் சந்திக்காத நெருக்கடிகளை நாம் சந்தித்துள்ளோம்.
முந்தைய அரசாங்கம் ஆட்சியைக் கொலைகார அரசியலாகவும், கோஷ்டிவாதமாகவும் மாற்றியது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி மாநிலத்தை முற்றிலுமாக அழித்துவிட்டது. இதைக் கேள்வி கேட்ட தெலுங்கு தேசம் கட்சி ஆர்வலர்கள் மற்றும் தலைவர்கள் கொலை செய்யப்பட்டனர். ஆனால் நீங்கள் கொடியை தாழ்த்தாமல் போராடியதற்காக நான் உங்களைப் பாராட்டுகிறேன். தெலுங்கு தேசம் ஒரு பிராண்ட். நாங்கள் நெறிமுறைகள் மற்றும் நேர்மையுடன் அரசியல் செய்கிறோம்.
ஆகஸ்ட் 15 முதல் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் கொண்டு வரப்படும். மாநிலத்தில் 5 ரத்தன் டாடா இன்னோவாஷன் மையங்களைத் திறக்கிறோம். நாட்டில் ஊழலை ஒழிக்க ரூ.500 நோட்டுகள் ரத்து செய்து டிஜிட்டல் பண பரிமாற்றத்தை கொண்டு வர வேண்டும். தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகமாக உள்ள நிலையில் ரூ.500 போன்ற பெரிய நோட்டுகள் தேவையே இல்லை.
டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வதன் மூலம் ஊழலை ஒழிக்க முடியும். எந்த ஒரு பண பரிமாற்றத்திற்கும் கணக்கிருக்கும். எனவே மீண்டும் ஒருமுறை கோரிக்கை வைக்கிறேன். ரூ.500 நோட்டுகளை ரத்து செய்து நாட்டில் ஊழலைக் குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக முகட்சி கொடியை ஏற்றி வைத்து நிறுவனர் என்.டி.ராமாராவ் படத்துக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
The post நாட்டில் ஊழலை குறைக்க ரூ.500 நோட்டுகளை ஒழிக்க வேண்டும்: ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு பேச்சு appeared first on Dinakaran.