புதுடெல்லி: ஒன்றிய பட்ஜெட்டில் இந்த முறையும் எங்களை அமைச்சர் நிர்மலா சீதாராமன் புறக்கணித்துவிட்டார். எங்களுக்கு வெறும் காலி சொம்பு மட்டுமே பட்ஜெட்டில் கிடைத்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புகார் தெரிவித்துள்ளன. ஒன்றிய பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இது குறித்து தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள்.
கேரளா முதல்வர் பினராயி விஜயன்: இந்த பட்ஜெட்டில் ரூ.24 ஆயிரம் கோடி கோரியிருந்தோம். ஆனால், கேரளாவின் கோரிக்கைகள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. வயநாடு பேரழிவுக்கு கூட நிதி ஒதுக்கவில்லை. இது அரசியலமைப்பின் கூட்டமைப்பு கொள்கைகளுக்கு எதிரானது.
கர்நாடகா முதல்வர் சித்தராமையா: நிதியமைச்சர் நிர்மலாவிடம் பல கோரிக்கைகளை வைத்தோம். ஆனால், அவர் கர்நாடகாவுக்கு காலி சொம்பை கொடுத்துள்ளார். நாட்டிலேயே அதிக வரி வசூலித்து தருவதில் 2வது இடத்தில் உள்ள கர்நாடகாவுக்கு ஒன்றும் தரவில்லை.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான்: இது பீகார் தேர்தலுக்கான பட்ஜெட். இதில் இந்த முறையும் பஞ்சாபுக்கு எதுவும் இல்லை. பஞ்சாபை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா புறக்கணித்துவிட்டார்.
திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி: மேற்கு வங்க மாநிலத்துக்கு இந்த பட்ஜெட்டில் எதுவுமே அறிவிக்கப்படவில்லை. பாஜவின் கண்ணுக்கு பீகார் மட்டுமே தெரிகிறது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா செய்தி தொடர்பாளர் மனோஜ் பாண்டே: ஜார்க்கண்ட் மாநிலத்தை ஒட்டு மொத்தமாக புறக்கணித்துள்ளார்கள். ஒன்றிய அரசின் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை கண்டிக்கத்தக்கது.
The post நிர்மலா தந்த காலி சொம்பு appeared first on Dinakaran.