சென்னை கோயம்பேடு மேம்பாலத்தின் கீழ் உள்ள ரவுண்டானா பகுதியில் பசுமைப் பூங்கா அமைக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சார்பில் 3.59 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பசுமைப் பூங்காவில் குழந்தைகள் விளையாடும் பகுதி, யோகா மையம், 8 வடிவ நடைபாதை, நடைபயிற்சி பாதை, 50 பேர் அமரும் அரங்கம் போன்ற பல வசதிகள் உருவாக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரவிருப்பது பாராட்டுக்குரியது.
ஏற்கெனவே கிண்டி கத்திப்பாரா பாலத்தின் கீழ் 5.9 லட்சம் சதுர அடியில். 14 கோடி ரூபாய் செலவில் கத்திப்பாரா சதுக்கம் அமைக்கப்பட்டு கடந்த 2021-ம் ஆண்டு முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட கத்திப்பாரா சதுக்கத்தில் 128 கார்கள் நிறுத்தும் வசதி, 340 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி, குழந்தைகள் விளையாடும் பகுதி, நடைபயிற்சி பாதை, நீரூற்று, பசுமைப் பூங்கா, உணவகங்கள் மற்றும் கலைப்பொருட்கள் விற்பனைப் பகுதி ஆகியவை 24 மணி நேரமும் திறந்திருப்பது பொதுமக்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.