கவுகாத்தி: பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்து கூறியதால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அசாம் எம்எல்ஏ கைதான நிலையில், இதுவரை 61 பேர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அசாம் மாநிலத்தின் எதிர்க்கட்சியான ஆல் இந்தியா யுனைடெட் டெமாக்ரடிக் ஃப்ரண்ட் என்ற கட்சியின் எம்எல்ஏ அமினுல் இஸ்லாம் என்பவர், ஏப்ரல் 24ம் தேதி பஹல்காம் தாக்குதலை ஒன்றிய அரசின் சதி என்றும், இந்த தாக்குதல் மதரீதியாக மக்களைப் பிரிக்கும் முயற்சி என்றும் பொதுக்கூட்டத்தில் பேசினார். இவரது இந்த கருத்து சமூக ஊடகங்களில் வைரலாகியது. இதனால் பொது அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடும் எனக் கருதி, அவர் மீது தேசதுரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குபதியப்பட்டது.
தொடர்ந்து அவர், நாகோன் மாவட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டார். கடந்த 14ம் தேதி பிணையில் விடுவிக்கப்பட்ட அவர், பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானை ஆதரித்து பேசியதாகக் கூறி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நாகோன் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நடவடிக்கை குறித்து அசாம் பாஜக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறுகையில், ‘பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.
இதுகுறித்து ஆல் இந்தியா யுனைடெட் டெமாக்ரடிக் ஃப்ரண்ட் கட்சித் தலைவர் பத்ருதீன் அஜ்மல் கூறுகையில், ‘எம்எல்ஏ அமினுல் இஸ்லாமின் கருத்துக்கள் அவரது தனிப்பட்ட கருத்து; அவரது கருத்து கட்சியின் நிலைப்பாடு அல்ல; தீவிரவாதத்துக்கு மதம் இல்லை. பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம், இஸ்லாமுக்கு களங்கம் விளைவிக்கிறது’ என்றார். அசாமில் இதுவரை பாகிஸ்தானுக்கு ஆதரவு கருத்துகளை தெரிவித்த குற்றச்சாட்டின் கீழ் இதுவரை 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
The post பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்து கூறியதால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் எம்எல்ஏ கைது: அசாமில் இதுவரை 61 பேருக்கு சிறை appeared first on Dinakaran.