திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த அனந்து கிருஷ்ணன் (28) என்பவர் பாதி விலைக்கு ஸ்கூட்டர், லேப்டாப், தையல் இயந்திரங்கள் தருவதாக கூறி பலரை ஏமாற்றி ரூ.1000 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து போலீசார் அனந்து கிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் காங்கிரஸ் மாநில துணைத் தலைவரான கொச்சியை சேர்ந்த லாலி வின்சென்ட், அனந்து கிருஷ்ணனிடம் இருந்து ரூ.40 லட்சம் பணம் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து இவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், தான் மோசடிப் பணத்தை வாங்கவில்லை என்றும், சட்ட ஆலோசனைக்காகவே ரூ.40 லட்சம் வாங்கியதாகவும் லாலி வின்சென்ட் கூறினார். இதற்கிடையே இந்த மோசடி தொடர்பாக மத்திய அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இந்நிலையில் நேற்று லாலி வின்சென்ட் மற்றும் அனந்து கிருஷ்ணனுக்கு தொடர்புடைய 12 பேரின் வீடுகளில் அமலாக்கத் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு வரை நீடித்தது.
The post பாதி விலைக்கு ஸ்கூட்டர், லேப்டாப் தருவதாக ரூ.1000 கோடி மோசடி காங்கிரஸ் பெண் தலைவரின் வீடு உள்பட 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை appeared first on Dinakaran.