*4 பேர் படுகாயம்
திருமலை : பிறந்தநாள் விழா முடிந்து திரும்பியபோது பஸ் மீது கார் மோதிய விபத்தில் 3 சகோதரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் உடன் பயணித்த நண்பர்கள் உள்பட 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தெலங்கானா மாநிலம், மஹபூப்நகர் மாவட்டம், அடகுலா மண்டலம், குடிபண்டா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வாச சாய் தேஜா, வாசா பவன் குமார், வாசா ராகவேந்தர், வாசா சிவ குமார், சாய் குமார். இவர்கள் அனைவரும் சகோதரர்கள். இவர்களது நெருங்கிய நண்பர்கள் மூசாபேட்டையை சேர்ந்த சந்தீப் மற்றும் சிவ குமார்.
இவர்கள் அனைவரும் ஐதராபாத்தில் வசித்து வரும் நிலையில், பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர். இதற்கிடையில், வாசா சிவகுமார் தனது பிறந்தநாளை ஒன்றாகக் கொண்டாட விரும்பினார்.
இதற்காக அனைவரும் நல்கொண்டா மாவட்டம், நேரெடுகொம்மா மண்டலத்தில் உள்ள விசாக் காலனிக்கு ஒரே காரில் சென்று அங்குள்ள கிருஷ்ணா நதிநீரின் பேக்வாட்டரில் நாள் முழுவதும் பிறந்தநாளை கொண்டாடினர். மேலும், கேக் வெட்டி இரவு வரை நடனமாடி, ஆடல் பாடல்களுடன் மகிழ்ந்தனர்.
அங்கிருந்து வீட்டிற்குச் செல்லப் புறப்பட்ட மீண்டும் காரில் புறப்பட்டனர். நேற்று அதிகாலை 2 மணியளவில், ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள யாச்சரம் மால் நகரில் கார் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த தனியார் பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில், கார் முற்றிலும் நொறுங்கியது.
இடிபாடுகளில் சிக்கி வாசா சாய் தேஜா(23), வாசா பவன் குமார்(25), வாசா ராகவேந்தர்(24) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். தகவல் கிடைத்ததும், போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்தநாள் கொண்டாட சென்று சகோதரர்களில் 3 பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
The post பிறந்தநாள் விழா முடிந்து திரும்பியபோது சோகம் பஸ் மீது கார் மோதி 3 சகோதரர்கள் பலி appeared first on Dinakaran.