சமூக அங்கீகாரத்துடன் பெண்ணுடலில் நிகழ்த்தப்பட்ட குழந்தை மணம், பருவம் எய்தும்முன் பாலுறவு, விதவைக்கோலம், சதி போன்ற ஆணாதிக்கப் பண்பாடுகளை நவீனத்துவம் அசைத்தது. சென்னை மாகாணத்திலும் திருவாங்கூர் சமஸ்தானத்திலும் கிறிஸ்துவ மிஷனரி பெண்களின் சேவை, நவீனக் கல்வி, ஆணாதிக்கத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் போன்றோர் ஆணாதிக்கத்தை உலுக்கினர். இச்சிக்கல்களைப் பெண் / பொதுப் பத்திரிகைகள் விவாதித்தன.
அரங்கநாயகி, அன்னபூரணி, நீலாம்பிகை, குஞ்சிதம், முத்துலெட்சுமி ரெட்டி, மீனம்பாள்சிவராஜ், பாலம்மாள், மகேஸ்வரி, ஜயலட்சுமியம்மாள், நாகலட்சுமியம்மாள், ரங்கநாயகி, ராஜேஸ்வரி அம்மாள், கிரிஜா, புதுவை ராஜலட்சுமி போன்றோர் முன்னணியில் செயல்பட்டனர். பெரியாரும் சுயமரியாதை இயக்கத்தினரும் இச்செயல்பாட்டை முழு வீச்சில் பரவலாக்கினர். பெண் கல்வி, தேவதாசி ஒழிப்பு, இணக்க வயது, காதல் மணம், விவாகரத்து, மறுமண விவாதங்கள் உக்கிரமாகின. ஆணாதிக்கத்துக்கு எதிரான ‘ஆண் மக்களல்லாதோர் மாநாடு’ உள்பட இலக்கியங்கள் படைக்கப்பட்டன.