ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி, இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வர்த்தக வரி விதித்துள்ளதன் மூலம், அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்து வந்த உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜவுளி, மீன், மர சாமான்கள் உள்ளிட்ட வர்த்தகம் பாதிக்கப்பட்டிருப்பது உண்மை என்றாலும் அதற்காக அமெரிக்காவிடம் இந்தியா அடிபணியும் என்று அந்நாடு எதிர்பார்ப்பது நகைப்புக்குரியது.
வர்த்தகத் தடையை சமாளிக்க மத்திய, மாநில அரசுகளும் ஏற்றுமதியாளர்களும் மாற்றுத் திட்டங்களை ஆலோசித்து வருவது நம்பிக்கையளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது. அதேநேரம், சர்வதேச அளவில் இந்தியா மேற்கொண்டு வரும் அணுகுமுறைகள் அமெரிக்காவை யோசிக்க வைத்துள்ளது. சீன அதிபர்ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோருடன் சேர்ந்து பிரதமர் மோடி எடுத்துக் கொண்ட புகைப்படம் மேற்கத்திய நாடுகள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது மட்டுமின்றி, செய்வதறியாது முன்னுக்குப் பின் முரணான கருத்துகளை தெரிவிக்கும் நிலைக்கு அவர்களை தள்ளியுள்ளது.