டெல்லி : மணிப்பூரில் பாஜக முதலமைச்சர் பிரேன் சிங், கலவரத்தை தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில், பிரேன் சிங்கின் குரல் பதிவை ஒன்றிய அரசின் தடய அறிவியல் சோதனை மையம் ஆய்வு செய்து அறிக்கையை சீலிட்ட கவரில் வைத்து தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணிப்பூர் கலவரத்தில் அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங்கிற்கு பங்கு உள்ளதாகவும் அவரே கலவரத்தை தூண்டிவிட்டதாகவும் அங்குள்ள குக்கி இனப்பிரிவு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. குக்கிகள் தரப்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகி வாதிட்டார்.
அப்போது, கலவரத்தை தூண்டியதாக வெளியான காணொளி Truth Lab மையம் மூலம் சோதனை செய்ததில் 93 சதவீதம் குரல் பிரேன் சிங்குடையது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் கலவரத்தில் முதலமைச்சருக்கு கு தொடர்பு உள்ளதால் அது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இது மிக முக்கியமான பிரச்சனை என்று வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து, ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்ரா, “இது குறித்து மாநில அரசு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. ட்விட்டர் நிறுவனத்திடம் ஆவணங்கள் கோரப்பட்டுள்ளன. முதலமைச்சரின் ஒளிப்பதிவு தடைய அறிவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது”, என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசின் தடைய அறிவியல் சோதனை மையம் முதலமைச்சரின் குரல் பதிவு குறித்து ஆய்வு செய்து சீல்டு கவரில் அறிக்கை அளிக்க உத்தரவிட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை மார்ச் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
The post மணிப்பூரில் கலவரத்தை தூண்டிய பாஜக முதல்வர் : 93 சதவீதம் உறுதியான குரல் பரிசோதனை; அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் ஆர்டர்!! appeared first on Dinakaran.