புதுடெல்லி: ஏமனால் மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட நிமிஷா பிரியா விரைவில் விடுதலை செய்யப்படுவார் எனறு மதபோதகர் கூறிய தகவலால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த செவிலியரான நிமிஷா பிரியா என்பவர், ஏமன் நாட்டில் பணியாற்றி வந்தார். அங்கு, ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் இணைந்து கிளினிக் ஒன்றை நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு தலாலைக் கொலை செய்து, அவரது உடலை தண்ணீர் தொட்டியில் மறைத்த வழக்கில் நிமிஷா பிரியா கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. ஷரியா சட்டப்படி, கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் மன்னிப்பு வழங்கினால் மட்டுமே நிமிஷா பிரியா விடுதலை ஆக முடியும் என்பதால், ‘தியா’ எனப்படும் ரத்தப் பணம் கொடுத்து அவரை விடுவிக்க ஒன்றிய அரசும், அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், கிறிஸ்தவ மதபோதகரான கே.ஏ.பால் அளித்த பேட்டியில், ‘நிமிஷா பிரியா விரைவில் விடுதலை செய்யப்படுவார். ஏமன் அதிகாரிகள் மற்றும் கொல்லப்பட்டவரின் குடும்பத்தினருடன் வெற்றிகரமாகப் பேச்சுவார்த்தை நடத்தியதின் பயனாக நிமிஷா பிரியாவுக்கு மன்னிப்பு வழங்க அவர்கள் ஒப்புக்கொண்டனர். இந்த முயற்சிக்கு முழு ஆதரவளித்த பிரதமர் மோடி, ஒன்றிய அரசு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார். கே.ஏ.பாலின் இந்த அறிவிப்பு, மரண தண்டனை கைதியாக உள்ள நிமிஷா பிரியாவின் விடுதலை தொடர்பான புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.
The post மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட நிமிஷா பிரியா விரைவில் விடுதலை?: மதபோதகர் கிளப்பிய புதிய பரபரப்பு appeared first on Dinakaran.