மும்பை: மராட்டியத்தில் வெளுத்தும் வாங்கும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ராய்காட்டில் அருவியின் மேல் புறம் ஏறிவிட்டு கீழே இறங்க முடியாமல் தவித்த 5 இளைஞர்களை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். மராட்டிய மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தாக்கத்தால் கனமழை வெளுத்தும் வாங்கும் நிலையில், புனேவில் சாலைகள் வெள்ளம் பாயும் ஆறுகளாக காட்சியளிக்கின்றன. வாகனங்கள் படகுகளை போல நீரை கிழித்து கொண்டு பயணித்தன.
புனே – சோலாபூர் நெடுஞ்சாலையில் சாலையில் கரைபுரண்ட வெள்ளத்தில் கார் ஒன்று மூழ்கிய காட்சிகளும் தென்பட்டன. புனேவில் உள்ள கண்டோபா கோயில் படிக்கட்டுகளை மழைநீர் அருவியாக மாற்றியுள்ளது. தொடர்ந்து 4 நாட்கள் பெய்த கனமழையால் கோயில் படிக்கட்டுகளில் மழைநீர் அருவி போல பாய்ந்தது. ராய்காட் மாவட்டத்தில் உள்ள பாண்டவ்கடா அருவியின் மேற்புறத்தில் ஏறி கீழே இறங்க முடியாமல் தவித்த 5 இளைஞர்களை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
கனமழையால் அருவிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியும் இளைஞர்கள் சென்ற நிலையில், வெள்ளம் ஆர்ப்பரிக்க தொடங்கியதும் கீழே இறங்க முடியாமல் சிக்கினர். புனேவில் பீமா சங்கர் வன உயிரியல் சரணாலயத்தில் உள்ள கொந்தவால் அருவியில் 16 ஆண்டுகளுக்கு பின்னர் முதன்முறையாக ஆவேசமாக காட்டாற்று வெள்ளம் பாய்கிறது. பிரமிட்டும் வகையில் வெள்ளம் ஆர்ப்பரித்து பாய்வதை மக்கள் காண வருவதை தடுக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
The post மராட்டியத்தில் கனமழையால் பெருக்கெடுக்கும் வெள்ளம்: புனேவில் ஆறுகளாக மாறிய சாலைகளில் மிதந்து செல்லும் வாகனங்கள்! appeared first on Dinakaran.