தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித் துறைக்கான மாநிலக் கல்விக் கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. மாநிலக் கொள்கையில் 1 முதல் 8ஆம் வகுப்புவரை கட்டாயத் தேர்ச்சி முறையை உறுதிசெய்வது, பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்துசெய்யப்படும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் பள்ளிக் கல்வியில் தமிழ்நாடு அரசின் நோக்கத்தை வெளிப்படுத்துகின்றன.
ஆரம்பத்தில் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி, நெருக்கடிநிலைக் காலக்கட்டத்தில் இந்திரா காந்தி அரசால் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. மீண்டும் அதை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்கிற குரல்கள் ஒலித்துவரும் நிலையில், 2020இல் மத்திய அரசு அறிவித்த புதிய தேசியக் கல்விக் கொள்கை சர்ச்சைக்குள்ளானது.