சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த இளைஞர் அஜித்குமார் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழக மக்களின் மனசாட்சியை உலுக்கிய சம்பவமாக அமைந்துள்ளது.
நகை திருட்டு புகார் வந்தால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, குற்றம் சாட்டப்படுபவர்களை அழைத்து விசாரித்து உண்மையை கண்டறிய முயற்சி செய்வதுதான் காவலர்களின் பணி. அந்த விசாரணைக்கும் எல்லை உண்டு. ஆனால், முதல் தகவல் அறிக்கைகூட பதிவு செய்யாமல், விசாரணை எல்லைகள் அனைத்தையும் மீறி, உயிர் போகும் அளவுக்கு அடித்து துன்புறுத்தும் செயல் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அத்தகைய கொடுஞ்செயலை அரங்கேற்றி, தமிழக காவல் துறையினர் தங்கள் பெயருக்கு இழுக்கை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.