ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் உள்ள அரசு பள்ளிகளில் உருது மொழி பாடத்தை நீக்கிவிட்டு சம்ஸ்கிருதத்தை அறிமுகப்படுத்த மாநில பாஜக அரசு உத்தரவிட்டிருப்பதாக கடும் கண்டனம் எழுந்துள்ளது. எதிர்ப்பு வலுத்ததால் உருது பாடத்தை நீக்கவில்லை என விளக்கம் அளித்திருக்கும் ராஜஸ்தான் கல்வி அமைச்சர். ஹிந்திக்கு முக்கியத்துவம் அளிப்பதே தங்கள் நோக்கம் என்று கூறியுள்ளார். ஜெய்ப்பூர் அரசு பள்ளிக்கு கல்வி அமைச்சர் மதன் தில்வாரின் உதவியாளர் எழுதிய கடிதத்தில் விருப்ப பாடமாக உள்ள உருதுவை நீக்கிவிட்டு சமஸ்கிருதத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிகானேர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இது போன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தகவல் வெளியானதால் உருது ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜஸ்தான் பாஜக அரசின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அது போன்ற எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று கல்வி அமைச்சர் தில்வார் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் உருது மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு நேரடியாக எந்த பதிலும் அளிக்காமல் ஹிந்தியை முதன்மைப்படுத்தி ஊக்குவிப்போம் என்றும் தில்வார் கூறியுள்ளார். இதற்கிடையே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் போலி சான்றிதழ்கள் கொடுத்து உருது ஆசிரியர்கள் பணியில் சேர்ந்ததாக தில்வார் கூறியதற்கும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
The post ராஜஸ்தான் பள்ளிகளில் உருதுக்கு பதில் சமஸ்கிருதமா?.. கல்வி அமைச்சர் விளக்கம் appeared first on Dinakaran.