காஞ்சிபுரம்: மும்மொழிக் கொள்கை என்பது மறைமுகமாக இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்கும் முயற்சி என்றும், மும்மொழிக் கொள்கை திட்டத்தை ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் தமிழ்நாடு ஏற்காது என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் பள்ளிக் கல்வித் துறை, பொது நூலக இயக்ககம் சார்பில் சென்னை இலக்கியத் திருவிழா- 2025 இன்று நடைபெற்றது. இந்த விழாவை அமைச்சர்கள் ஆர்.காந்தி, அன்பில் மகேஸ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியது: “இலக்கியச் செழுமை மிக்க தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில் ஆண்டுக்கு ஐந்து இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பொது நூலக இயக்ககம் வாயிலாக தமிழகத்தில் பொருநை, வைகை, காவேரி, சிறுவாணி, சென்னை என நதி நாகரிக மரபு அடிப்படையில் நான்கு இலக்கியத் திருவிழாக்களும், சென்னை இலக்கியத் திருவிழாவும் நடத்தப்பட்டு வருகிறது.